Archives: டிசம்பர் 2019

அழகிய கனி

மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம் உருவாவதற்கு காரணமாயிருந்த ரெபேக்கா லெமோஸ் ஓடெரோ என்பவர், “குழந்தைகளே, நீங்கள் ஒரு விதையைத் தோட்டத்தில் எங்கேயாகிலும், நீங்கள் விரும்பும் இடத்தில் எறியுங்கள், பின்னர், அதிலிருந்து என்ன வெளியாகிறது என்று பாருங்கள்” என்றார். இது சரியான தோட்டக் கலையல்ல, எனினும், ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு ஜீவனை உருவாக்கக்கூடிய ஆற்றல் பொதிந்துள்ளது என்ற உண்மையை, அது வெளிப்படுத்தியது. 2004ஆம் ஆண்டிலிருந்து மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம், பள்ளிகளிலும், குறைந்த வருமானம் உள்ள பகுதிகளிலும் தோட்டங்களை உருவாக்கியது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களைப் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தோட்ட வேலைக்கான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. “பட்டணங்களில் பசுமை நிறைந்த இடங்களை உருவாக்குவதன் மூலம், குழந்தைகள் சுற்றுப்புறங்களிலுள்ள அழகிய இடங்களில் பயன் தரும் காரியங்களைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது” என்றார், ரெபேக்கா.

இயேசு கிறிஸ்து, விதை விதைப்பதைக் குறித்து ஒரு கதையைக் கூறினார். இந்த விதைகள் நூறு மடங்கு விளைச்சலைத் தந்தன (லூக்கா 8:8) இங்கு, தேவனுடைய வார்த்தைகளாகிய விதைகள் நல்ல நிலத்தில் விதைக்கப் படுகின்றது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.”  என்பதாக விளக்குகின்றார் (வச. 15).

நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பதற்கான ஒரேவழி கிறிஸ்துவில் நிலைத்திருப்பதேயாகும் (யோவா. 15:4). கிறிஸ்து நமக்கு கற்பித்ததைப் போன்று, நாம் அவரைப் பற்றிக் கொண்டால், ஆவியானவர் நம்மில் அவருடைய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலா. 5:22-23), ஆகிய இவற்றை நம்மில் காணச்செய்வார். நம்மில் உருவாக்கிய இந்தக் கனிகளின் மூலம், மற்றவர்களின் வாழ்வைச் சந்திக்கச் செய்வார், அவர்களின் வாழ்வும் கனிதரும் வாழ்வாக மாற்றப் படும். இது ஓர் அழகிய வாழ்வை உருவாக்கும்.

உருவாக்கப்பட்ட குறைபாடு

எருசலேம் நகரத்தின் கிழக்குப் பக்கத்தில், இயற்கையில் அமைந்த ஒரு நீரூற்று உள்ளது. அந்தக் காலத்தில், அப்பட்டணத்திற்குத் தண்ணீர் தரக்கூடிய ஒரே ஊற்று அதுதான். ஆனால், அது பட்டணத்தின் அலங்கத்திற்கு வெளியே அமைந்துள்ளது. எருசலேம் நகரத்தைப் பிடிப்பதற்கு உகந்த இடம் இதுதான். ஊடுருவ முடியாத இப்பட்டணத்தை, எதிரிகள் வளைந்து கொண்டு, இந்த நீரூற்றை வேறு திசைக்குத் திருப்பவோ, அல்லது அதன் நீரைத் தடுத்து நிறுத்தவோ செய்தால், அப்பட்டணத்தாருக்குச் சரணடைவதை விட வேறு வழியில்லை.

இந்த பெலவீனத்தையறிந்த எசேக்கியா ராஜா, கடினமான மலை வழியே 1750 அடி நீளமுள்ள கால்வாயை வெட்டி, அதன் வழியே தண்ணீரை பட்டணத்துக்குள் உள்ள குளத்திற்குக் கொண்டு வந்தான் (2 இரா. 20:20, 2 நாளா. 32:2-4). இவை எல்லாவற்றிலும், அதைச் செய்தவரை, அவர் நோக்காமலும், அதை ஏற்படுத்தி, தூரத்திலிருந்து வரும்படி திட்டம் பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள், என்று எசேக்கியாவைக் குறித்து கூறுகின்றார் (ஏசா. 22:11) எதைத் திட்டம் பண்ணினார்?

எருசலேம் பட்டணத்திற்குத் தண்ணீர் தரும் ஊற்றை, பட்டணத்திற்கு வெளியே இருக்குமாறு திட்டமிட்டவர் தேவன் தாமே. அந்தப் பட்டணத்தினுள் வாசம் பண்ணுவோர், தங்களுடைய இரட்சிப்புக்கு தேவனாகிய கர்த்தரையே சார்ந்திருக்கும்படி அவர்களுக்கு தொடர்ந்து நினைப்பூட்டவே, அந்த  நீரூற்றை பட்டணத்திற்கு வெளியே அமைத்தார். 

இது நம்முடைய குறைபாடுகளும், நம்முடைய நலனுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்போஸ்தலனாகிய பவுலும், தனக்கிருந்த குறைகளைக் குறித்துக் கூறும் போது, “ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” (2 கொரி. 12:9) என்கின்றார். எனவே, நாமும் நமக்கிருக்கின்ற குறைகளை, தேவனுடைய பெலன் நம்மில் வெளிப்படும் படி, கொடுக்கப்பட்ட ஈவுகளாகக் கருதுவோமா?

அன்பில் கழுவப்படல்

தெற்கு கலிஃபோர்னியாவிலுள்ள ஓர் ஆலயத்தின் விசுவாசிகள், தேவனுடைய அன்பை செயல் முறையில் காண்பிக்க விரும்பினர். அவர்கள் அருகிலுள்ள, இயந்திரம் மூலம் துணி துவைக்கும் இடத்தில் கூடி, தங்களின் சமுதாயத்தில் தேவையுள்ளோருக்கு, துணிகளைத் துவைத்து, மடித்து, அவற்றோடு, சூடான உணவையும், மளிகை சாமான்கள்  அடங்கிய பைகளையும் சேர்த்து வழங்கினர்.

இவ்வாறு செய்யும் போது, ஒரு தன்னார்வத் தொண்டர் கண்டுபிடித்தது என்னவெனில், “அம்மக்களோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைப்பதாகவும், அவர்களுடைய கதைகளைக் கேட்க முடிந்ததாகவும்” கூறினார். அவர்கள் இயேசுவோடு சரியான உறவை வைத்திருப்பதால், தங்களுடைய விசுவாசத்தை வாழ்வில் காட்ட விரும்பினர், அன்பான வார்த்தையாலும், அன்பின் செய்கையாலும் மற்றவர்களுக்கு உதவி, அவர்களோடு உண்மையான உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர்.

ஒவ்வொரு விசுவாசியினுடைய உண்மையான விசுவாசத்தின் விளைவை, அவர்களுடைய அன்பின் கிரியைகளில் காணலாம் என  அப்போஸ்தலனாகிய யாக்கோபு  கூறுகின்றார். “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” (யாக். 2:17) என்று சொல்கின்றார். நாம் தேவனை விசுவாசிக்கிறோம் என்று அறிக்கையிடும் போது, அவருடைய பிள்ளைகளாகின்றோம், நாம் மற்றவர்களுக்குப் பணிசெய்வதன் மூலம் தேவனுக்கு ஊழியம் செய்யும் போது, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகிறோம் (வச. 24) ஆவியும், சரீரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல, விசுவாசமும், ஊழியமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன (வச. 26) என கிறிஸ்துவின் வல்லமை நம் மூலமாக, நம்மில் வெளிப்படுவதை அழகாகக் காட்டுகின்றார்.

தேவன் சிலுவையில் வெளிப்படுத்தின தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பினால் முற்றிலும் கழுவப்படும் போது, நம்முடைய உண்மையான விசுவாசம், நாம் முழுமனதோடு பிறருக்குச் செய்யும் அநேகக் கிரியைகளினால் விளங்கும்.

நீ ஒரு போதும் மறக்கப்பட்டுப் போவதில்லை

பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, பியானோவின் அடிப்படை பாடங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு நிரூபித்துக்காட்ட, நான் பியானோவை வாசிக்கும்படி அமர்ந்தேன். சி மேஜர் இசையில் ஆரம்பித்தேன். கடந்த  இருபது ஆண்டுகளில் மிகச் சிறிய அளவே வாசித்திருப்பேன். ஆனால் என்ன ஆச்சரியம்!  இசை இன்னமும் என் நினைவிலிருக்கிறது, எனக்கு ஒரு தைரியமும் கிடைத்தது, நான், என் நினைவிலிருந்து, ஏழு வெவ்வேறு ஆதாரச் சுருதிகளையும், ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தேன். நானே  அதிர்ந்து போனேன்! பல ஆண்டுகளின் பயிற்சி, அந்தப் பாடங்களை என்னுடைய மனதில் பதித்து விட்டது, விரல்களுக்குத் தேவையான நுட்பங்களும், என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவை உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துவிட்டன.

சில காரியங்களை, நாம் மறக்கவே முடியாது. தேவன் தம்முடைய பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பும், நம்முடைய மங்கிப் போகும் நினைவைப் போல் அல்லாமல், அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. உண்மையில் தேவன் ,நம்மை மறப்பவரல்ல. ஆனால், புறதேசத்திற்கு சிறைப்பட்டுப் போன இஸ்ரவேலர்கள், கர்த்தர் நம்மைக் கைவிட்டார், ஆண்டவர் நம்மை மறந்தார் என்று சொல்கின்றார்கள், (ஏசாயா49:14). ஏசாயா தீர்க்கன் மூலமாக தெளிவாக கூறவிரும்புகிறார். “ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” (வ.15) என்று உறுதியாகக் கூறுகின்றார். 

தேவன் தன்னுடைய மாறாத அன்பை, அவர்கள் அறிந்து கொள்ளும்படியும் தன்னுடைய பிள்ளைகளின் மீது அவர் கொண்டுள்ள கரிசனையை, அவர்கள் தெரிந்து கொள்ளும் படியும், “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்,” (வ.16) என்கின்றார். இது, அவருடைய பிள்ளைகளின் மீது அவர் எத்தனை விழிப்பாயிருக்கின்றார் என்பதைக் காட்டுகிறது. அவர்களுடைய முகங்களும், பெயர்களும் எப்பொழுதும் அவருக்கு முன்பாக நிற்கின்றன.

இன்றும் கூட, நாம் தேவன் நம்மை மறந்து விட்டார், கைவிட்டு விட்டார் என்று எளிதில் கூறிவிடுகின்றோம். ஆனால் நம்மை அவர் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலாயிருக்கின்றது. இப்பொழுதும் நம்முடைய தந்தை நம்மை மறக்கவில்லை, நம்மைப் பாதுகாக்கின்றார், நம் மீது அன்பு செலுத்துகின்றார் என்பதை மறவாதே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.